லூர்தம்மாள் சைமன் (இயற்பெயர் மரிய லூர்தம்மாள்) என்பவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு அரசியில்வாதியும் முன்னாள் அமைச்சரும் ஆவார்.
வாழ்க்கை:-
லூர்தம்மாள் கி.பி. 1911 செப்டம்பர் 26- இல் கன்னியாகுமரி மாவட்டம், மணக்குடி என்னும் மீனவ கிராமத்தில் பிறந்தார். இவர் முக்குவர் சமூகத்தைச் சார்ந்தவர். இவருடைய தகப்பனார் பெயர் அலெக்சாண்டர். இவருடைய தாயார் வாவத்துறை மீனவர் கிராமத்தைச் சார்ந்தவர். இவருடைய தகப்பனார் இலங்கையில் கொழும்புத் துறைமுகத்தில் கருவாட்டு ஏற்றுமதி செய்யும் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்தார். லூர்தம்மாள், பத்தாம் வகுப்பு வரை நாகர்கோவில் புனித யோசப் பள்ளியில் ஆங்கில வழிக் கல்வி பயின்றார். தனது படிப்பினை முடித்தபிறகு அதே பள்ளியில் சிலகாலம் ஊதியம் பெறாத ஆசிரியராகப் பணி புரிந்தார்.

மரிய லூர்தமாளுக்கும் குளச்சலை சார்ந்த அலெக்சாண்டர் மேனுவேல் சைமனுக்கும் மேலமணக்குடி ஆலயத்தில் வைத்து திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்குப் பிறகு இருவரும் வளைகுடா நாட்டில் சில வருடங்கள் வாழ்ந்து வந்தனர். அப்பொழுது லூர்தம்மாளின் கணவர் ஈரான் எண்ணெய் நிறுவனத்தில் பணி புரிந்து வந்தார். இவர்களுக்கு ரால்ஃப் சைமன், ஜாண் எட்மண்ட் சைமன் பிறந்தனர். இரண்டு குழுந்தைகள் பிறந்தவுடன் தாயகம் திரும்பினர். நாகர்கோவிலில் வீடு வாடகைக்கு எடுத்துத் தங்கினர். அதன்பின்பாக ஜஸ்டின் ஆஸ்கர் சைமன், கியூபர்ட் டோமினிக் சைமன், பீட்டர் வில்பிரட் சைமன் ஆகியோர் பிறந்தனர்.

அரசியலில் லூர்தம்மாளின் கணவர் அலெக்சாண்டர் மேனுவேல் சைமன் திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரசில் இணைந்தார். அப்பொழுது கன்னியாகுமரி மாவட்டம் கேரளாவுடன் இருந்தது. 1951 விளவங்கோடு தொகுதியிலும், 1954 கொல்லங்கோடு தொகுதியிலும் வெற்றிபெற்று கேரளாவில் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். 1956 கன்னியாகுமரி மாவட்டமானது சென்னையுடன் இணைக்கப்பட்டது. 1957-இல் இந்திய தேசிய காங்கிரசு வேட்பாளராக லூர்தம்மாள் சைமன், குளச்சல் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1957-62ல் காமராஜரின் இரண்டாவது அமைச்சரவையில் உள்ளாட்சித்துறை அமைச்சராகவும் மீன்வளத்துறை அமைச்சராகவும் பதவி வகித்தார்.

அமைச்சராக:-
லூர்தம்மாள் மீன்வளத்துறை அமைச்சராக இருந்தபோது மீன் வளர்ப்பை ஊக்குவிக்கும் வகையில் 1959 இல் வெள்ளிக்கெண்டை மீனை சீனாவிலிருந்தும், புற்களை விரும்பிச் சாப்பிடும் புல் கெண்டை மீனை ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்தார். இதன்வழியாக கெண்டை ரக மீன் வளர்ப்பைத் தமிழகம் முழுவதும் விவசாயிகள் மத்தியில் பரவலாக்கினார்.

லூர்தம்மாள் உள்ளாட்சித் துறை அமைச்சராகப் பொறுப்பேற்ற காலகட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகள் ஏட்டளவில் மட்டுமே இருந்தன. இதை மாற்ற 1958 இல் லூர்தம்மாளின் முயற்சியால் ‘தமிழ்நாடு பஞ்சாயத்து சட்டம்’ உருவாக்கப்பட்டது. அதன்படி, அதிகாரம் படைத்த மாவட்ட ஆட்சிக் குழு முற்றிலுமாகக் கலைக்கப்பட்டு கிராமம், ஒன்றியம் என்ற அளவில் பஞ்சாயத்துக்களின் கட்டமைப்பு மாற்றியமைக்கப்பட்டது. உள்ளாட்சி அமைப்புகளில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. பெண்களை நியமன உறுப்பினர்களாக நியமித்துக்கொள்ள வழிவகை செய்யப்பட்டது.