குளச்சல் அருகே 10-ம் வகுப்பு மாணவி பள்ளிக்கு சென்று வரும்போது பின்தொடர்ந்து சென்று பாலியல் தொல்லை கொடுத்து வந்த மீன்பிடி தொழிலாளி மீது போலீசார் 2-வது முறையாக போக்சோ பிரிவில் வழக்குபதிவு செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
குளச்சல் அருகே உள்ள கொட்டில்பாடு பகுதியை சேர்ந்தவர் கவாஸ்கர் (வயது 22). இவர் மீன்பிடி தொழில் செய்து வருகிறார். தற்போது கோடிமுனையில் வசித்து வருகிறார்.

இந்நிலையில் குளச்சல் மரமடி பகுதியை சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவி ஒருவர் பள்ளிக்கு சென்று வரும்போது, கவாஸ்கர் பின்தொடர்ந்து சென்று பாலியல் தொந்தரவு செய்துள்ளதாக தெரிகிறது.

கவாஸ்கரின் தொல்லை தாங்க முடியாமல் மாணவியின் பெற்றோர் அவரை வேறு ஊரில் உள்ள பள்ளியில் சேர்த்தனர். தற்போது குளச்சல் ஆலய திருவிழாவையொட்டி கடந்த 2 நாட்களுக்கு முன்பு மாணவி ஊருக்கு வந்தார். சம்பவத்தன்று அக்காவுடன் டெய்லர் கடைக்கு சென்று கொண்டிருந்தார்.

பீச் பகுதி அருகே வந்த போது, மாணவியை பார்த்த கவாஸ்கர் பின்தொடர்ந்து வந்து, மாணவியின் கையை பிடித்து இழுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து மாணவியின் தாய் குளச்சல் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

அதன்பேரில் போலீசார் கவாஸ்கர் மீது போக்சோ பிரிவின் கீழ் வழக்குபதிவு செய்து அவரை தேடி வருகின்றனர். ஏற்கனவே கடந்த சில மாதங்களுக்கு முன்பு இதே மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கவாஸ்கர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டது. அந்த வழக்கில் தற்போது ஜாமீனில் உள்ளார்.