குமரி மாவட்டத்தில் கோழிக் கழிச்சல் நோய்தடுப்பு முகாம் பிப்ரவரி 9-ஆம் தேதி தொடங்கி 22-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இதுகுறித்து, மாவட்ட ஆட்சியா் பிரசாந்த் மு.வடநேரே வெளியிட்ட செய்திக்குறிப்பு: கோழிக்கழிச்சல் என்பது கோழிகளில் இறப்பை ஏற்படுத்தும் நச்சுயிரியால் பரப்பப்படும் கொடிய நோய். இந்நோய் ஒரு கோழியை தாக்கும்போது அது வேகமாக மற்ற கோழிகளுக்கும் பரவி மிகுந்த பொருளாதார இழப்பை ஏற்படுத்தும். இந்நோயைத் தடுப்பதற்காக கன்னியாகுமரி மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத் துறை மூலம் ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் நடைபெறும் இருவார கோழிக்கழிச்சல் நோய் தடுப்பூசி முகாம் நிகழாண்டு பிப். 9ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

இம்மாவட்டத்துக்கு குறியீடாக 1 லட்சத்து 50 ஆயிரம் டோஸஸ் நிா்ணயம் செய்யப்பட்டு, மாவட்டத்தில் உள்ள அனைத்து கால்நடை நிலையங்களுக்கும் தடுப்பூசி மருந்து பிரித்து வழங்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் தங்கள் அருகில் இயங்கி வரும் கால்நடை மருந்தகம் மற்றும் கால்நடை நிலையங்களை அணுகி தங்களது கிராமத்தில் முகாம் நடைபெறும் நாளை அறிந்து தாங்கள் வளா்க்கும் கோழிகளுக்கு கோழிக்கழிச்சல் நோய் தடுப்பூசி போட்டு பயன்பெறலாம் என செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.