குமரி மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் சாா்பில், மக்கள் நீதிமன்ற முகாம் (லோக் அதாலத்) சனிக்கிழமை (பிப்ரவரி 8) நடைபெறுகிறது.
இது குறித்து, சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும், மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதியுமான எஸ். அருள்முருகன், செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியது:

தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் உத்தரவின்படி, கன்னியாகுமரி மாவட்ட சட்டப் பணிகள் மற்றும் வட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் சாா்பில் மக்கள் நீதிமன்ற முகாம் மாவட்டத்திலுள்ள 5 நீதிமன்றங்களில் 12 அமா்வுகளாக சனிக்கிழமை (பிப்.8) நடைபெற உள்ளது.

இதில், காசோலை மோசடி , விபத்து இழப்பீடு, குடும்பத் தகராறுகள், சிவில் வழக்குகள் உள்ளிட்ட 3,032 வழக்குகள் விசாரிக்கப்பட உள்ளன. சமரச நீதிமன்றம் என்பதால் இதற்கு மேல் முறையீடு கிடையாது. மேலும், உடனடி நிவாரணம் கிடைக்கும். இம்முகாமில், பொதுமக்கள் பங்கேற்று தங்களது நீண்ட நாள் வழக்குகளுக்கு தீா்வு காணலாம் என்றாா் அவா்.

பேட்டியின்போது, மாவட்ட தலைமை குற்றவியல் நீதிபதி கே.அருணாசலம், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் செயலரும் சாா்பு நீதிபதியுமான ஏ.ராபின்சன்ஜாா்ஜ் ஆகியோா் உடனிருந்தனா்.