மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டம் 2019-ஐ திரும்ப பெறக்கோரியும், தேசிய மக்கள் தொகை பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றை நடைமுறைப்படுத்துவதை நிறுத்தி வைக்க கோரியும் மத்திய அரசை வலியுறுத்தி குமரி மக்கள் ஒற்றுமை இயக்கத்தின் சார்பில் நாளை (புதன்கிழமை) மாலை 5 மணி முதல் 5.30 மணிவரை கன்னியாகுமரி முதல் களியக்காவிளை வரை 58 கிலோ மீட்டர் தூரத்துக்கு மனித சங்கிலி இயக்கம் நடைபெற இருக்கிறது.
இந்த மனித சங்கிலியில் அனைத்து தரப்பு மக்களும் பங்கேற்க வலியுறுத்தும் விதமாக குமரி மக்கள் ஒற்றுமை இயக்கம் சார்பில் பொதுமக்களுக்கு நாகர்கோவில் அண்ணா பஸ் நிலைய பகுதியில் துண்டு பிரசுரங்கள் வினியோகிக்கும் நிகழ்ச்சி நேற்று காலை நடந்தது. இதற்கு குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பொதுமக்கள், அண்ணா பஸ் நிலைய பயணிகள், கடை வியாபாரிகள் ஆகியோருக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

இதில் குமரி மக்கள் ஒற்றுமை இயக்க செயலாளர் நாகராஜன், தி.மு.க. நகர செயலாளர் மகேஷ், முன்னாள் கவுன்சிலர் சாகுல் ஹமீது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள் அந்தோணி, உசேன், தங்கமோகன், மோகன், மனோகர ஜஸ்டஸ், மீனாட்சி சுந்தரம், ம.தி.மு.க. சார்பில் ஜெரோம் ஜெயக்குமார், பாலசுப்பிரமணியன், எம்.எல்.எப். தொழிற்சங்கத்தை சேர்ந்த சந்திரன், தி.க.சார்பில் பொன்னுராசு, பெஞ்சமின், ராஜநாயகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. கூறியதாவது:- மனித சங்கிலி குறித்து பொதுமக்களுக்கு தெரிவிக்க துண்டு பிரசுரங்கள் வினியோகத்தை தொடங்கியிருக்கிறோம்.

இந்து சகோதரர்களுக்கும் ஒன்றை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். இந்த சட்டத்தால் முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும்தான் பாதிக்கப்படுவார்கள் என்ற எண்ணத்தில் இந்துக்கள் இருந்து கொண்டிருக்கிறார்கள். அசாம் மாநிலத்தில் ரூ,1,600 கோடி செலவில் இந்த சட்டத்தை நிறைவேற்றியதின் மூலமாக அங்கு கணக்கெடுக்கப்பட்டு, 19 லட்சம் பேர் அகதிகளாக ஆக்கப்பட்டுள்ளனர். அதில் 50 சதவீதத்துக்கும் மேல் இந்துக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதை இந்து சகோதரர்கள் எண்ணிப்பார்க்க வேண்டும். அதே பாதிப்பு நிச்சயமாக நமக்கும் வரும் என்பதை நீங்கள் மறந்து விடாமல், இந்த போராட்டத்துக்கு உங்களுடைய ஆதரவை தரவேண்டும்.

இவ்வாறு சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. கூறினார்.